Tamilnadu

”குத்தகை பணத்தை கொடுக்காமல் உள் வாடகைக்கு விட்ட பிரபல ஹோட்டலுக்கு சீல் வைப்பு” - தஞ்சை ஆட்சியர் அதிரடி!

அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.12 கோடியை தராமல் ஏமாற்றியதாக பிரபல ஹோட்டலுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். இதனையடுத்து அங்கு ஏராளமான போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள டெம்பிள் டவர் ஹோட்டல் 3 நட்சத்திர அந்தஸ்து கொண்டது. 1994ம் ஆண்டு 8 ம் உலகத் தமிழ் மாநாட்டின்போது வெளிநாடுகளில் இருந்து வரும் விருந்தினர்கள் தங்குவதற்காக மாவட்ட வருவாய்துறை 6,160 சதுர அடி நிலத்தை 30 ஆண்டு குத்தகைக்கு வழங்கி, கட்டடம் கட்டுவதற்கு மானியமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தற்போது 30 ஆண்டுகால குத்தகை முடிந்த நிலையில் குத்தகைக்கு பெற்ற செல்வராஜ், குத்தகை தொகையான ரூ.12 கோடியை செலுத்தாமல் அரசை ஏமாற்றியதோடு, அரசுக்கு தெரியாமல் வெங்கடாஜலம் மற்றும் குமார் என்பவர்களுக்கு உள் குத்தகைக்கு விட்டுள்ளார்.

இந்நிலையில் குத்தகை காலம் 2016ம் ஆண்டே முடிந்துவிட்ட நிலையில், பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் ரூ.12 கோடி குத்தகை பாக்கியை கொடுக்காமல் அரசை ஏமாற்றியதால், இன்று காலை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் அதிரடியாக சென்று பலத்த போலிஸ் பாதுகாப்புடன் தண்டோரா போட்டு அறைகளில் தங்கியிருந்தோரை காலிசெய்ய சொல்லிவிட்டு ஹோட்டலுக்கு சீல் வைத்தனர்.

இதுகுறித்து பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், குத்தகை விதிகளை பின்பற்றாமல், 12 கோடி ரூபாய் வரை வருவாய் பாக்கி வைத்தது மட்டுமல்லாமல், உள் வாடகைக்கு விட்டு சம்பாதித்துள்ளனர்.

எனவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறைகளில் தங்கியிருந்த விருந்தினர்களுக்கு, கட்டணத்தை திருப்பி அளித்து, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேப்போன்று அரசை ஏமாற்றி வந்தவர்கள் மீது நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Also Read: “பட்டன் செல்போன்களை பயன்படுத்தும் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 3 கூட்டாளிகள்”: பணமோசடி வழக்கில் புதிய தகவல்!