Tamilnadu

இடிந்து விழுந்த குடியிருப்பு : தலா ₹.1 லட்சம் நிவாரணம்.. மாற்று குடியிருப்பு - முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடங்கள் உள்ளன. 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தில் மொத்தம் 336 அடுக்குமாடி வீடுகள் உள்ளன. 4 பிளாக்குகளாக உள்ள இந்த குடியிருப்பில் டி பிளாக்கில் உள்ள 24 வீடுகள் உள்ளன.

ஏற்கனவே வீடுகளில் விரிசல் ஏற்பட்ட நிலையில் அங்கு குடியிருந்தவர்கள் வீடுகளை காலி செய்யவேண்டும் என முடிவு எடுத்து அதற்கான பணிகள் நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை விரிசல் திடீரென அதிகமானதால் அங்கிருந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறினார்கள். அனைவரும் வெளியேறிய சிறிது நேரத்திலேயே கட்டடம் சரிந்து விழுந்தது.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி, காவல்துறை, தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்தை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்து பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் 1993-ல் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.

விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களை நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்து, விபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்று குடியிருப்புகள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன். பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் துவங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விபரங்களைச் சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 6 வயதில் சொந்த வீடு வாங்கிய சிறுமி : தலை சுற்ற வைக்கும் விலை - எப்படி வாங்கினார்..? - ஆச்சர்ய தகவல்!