Tamilnadu

“கலைஞர்கிட்டயிருந்து இது ஒண்ணுதான் எனக்கு கிடைக்கல” : சண்முகநாதன் சொன்ன விஷயம்!

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் ஆருயிர் நண்பரும் அவரது உதவியாளருமான கோ.சண்முகநாதன் நேற்று காலமானார். அவருக்கு வயது 80. சண்முகநாதனின் மறைவுச் செய்தி தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதவியாளர், செயலாளர் என்பதையெல்லாம் தாண்டி முத்தமிழறிஞர் கலைஞரின் நிழலாக இருந்தவர் சண்முகநாதன். சுமார் 50 ஆண்டுகாலம் கலைஞரோடு நெருக்கமாகப் பயணித்தவர்.

முத்தமிழறிஞர் கலைஞர் மறைவுக்குப் பிறகும் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து தனது பணிகளைச் செய்து கொண்டிருந்தவர் சண்முகநாதன். அவரது மறைவு தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.கவினர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது மறைவுச் செய்தியறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தலைவர் கலைஞரின் வரலாற்றின் அனைத்துப் பக்கங்களையும் எழுதும் தகவல் களஞ்சியம் அவர். அரை நூற்றாண்டுகால தமிழக அரசியலை முழுமையாக அறிந்த வரலாற்றுப் புத்தகம் அவர். அனைத்துக்கும் மேலாக எங்களது கோபாலபுரக் குடும்பத்தின் ஒரு முக்கியமான தூண் சரிந்துவிட்டது.” என உருக்கமாகக் குறிப்பிட்டார்.

கலைஞரின் மறைவுக்குப் பிறகு சண்முகநாதன் ஒரு பேட்டியின்போது, "உங்களுக்கு தனிப்பட்ட முறையில கோரிக்கை ஏதாவது இருக்கா அய்யா?" என்ற கேள்விக்கு இப்படி பதிலளித்தார்...

"எனக்கு தனிப்பட்ட கோரிக்கைனு எல்லாம் ஒண்ணுமில்ல... தலைவரோட வேலை பார்த்தவங்களுக்கெல்லாம் அவங்க இறந்து போனாங்கன்னா, அவர் உருக்குமா கவிதை எழுதுவாரு. அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காம போயிடுச்சு. அதுக்கு எனக்கு கொடுத்து வைக்கலை."

இன்னொரு பேட்டி ஒன்றில், “என்னோட இந்தப் பிறவி தலைவருக்கானது” என உணர்ச்சிப் பெருக்குக்கு மத்தியிலும் நிதானமாகச் சொன்னவர் சண்முகநாதன். ஆகையால்தான் சண்முகநாதனின் மறைவால் கலங்குகிறார்கள் கலைஞரின் உடன்பிறப்புகள்.

Also Read: ‘’தி.மு.க.வின் உணர்வாக உலவியவர்;முத்தமிழறிஞர் கலைஞரின் முதன்மைத் தொண்டர் சண்முகநாதன்‘’-சிறப்புக்கட்டுரை!