Tamilnadu

தந்தையின் நிழல் சண்முகநாதன் : குடும்பத்தினருடன் இறுதி அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் ஆருயிர் நண்பரும் அவரது உதவியாளருமான கோ.சண்முகநாதன் காலமானார். அவருக்கு வயது 80. உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் சண்முகநாதன்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று கோ.சண்முகநாதனின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுச் செய்தி தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கோ.சண்முகநாதனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலையே சண்முகநாதனின் உடலுக்குக் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் முதலமைச்சர் அலுவல் பணிக்குத் திரும்பினார். இதை முடித்துக்கொண்டு மீண்டும் இரவு வந்து சண்முகநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது வீட்டில் வைக்கப்பட்ட சண்முகநாதனின் உடலுக்கு நேற்று மாலையிலிருந்தே அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையடுத்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தாருடன் நேரில் வந்து மீண்டும் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதனின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனால் முதலமைச்சரின் இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Also Read: ‘’தி.மு.க.வின் உணர்வாக உலவியவர்;முத்தமிழறிஞர் கலைஞரின் முதன்மைத் தொண்டர் சண்முகநாதன்‘’-சிறப்புக்கட்டுரை!