Tamilnadu

கேரளாவில் மீண்டும் பரவும் பறவைக் காய்ச்சல்.. தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்திய நீலகிரி ஆட்சியர் !

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில், கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், கேரளாவில் இருந்து பறவைக்காய்ச்சல் தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மற்றும் கால்நடை துறையினருடன் ஒன்றிணைந்து மிக தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கேரளாவிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய நாடுகாணி, தாளூர், எருமாடு, முள்ளி,கக்கநள்ளா உட்பட 9-சோதனை சாவடிகளில் கால்நடை துறையினர் சுகாதாரத்துறையினர் உடன் ஒன்றிணைந்து கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நீலகிரியில் அனுமதிக்கப்படுகிறது. நான்காவது நாளாக இன்றும் இப்பணி தொடர்கிறது.

பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ். பி .அம்ரித் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கேரளாவில் இருந்து வரும் அனைத்து சோதனை சாவடிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை அவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கேரளாவில் இருந்து கோழி, வாத்து உட்பட பறவைகளை நீலகிரி கொண்டுவர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதுபோல் கேரளா எல்லையோர கிராமங்களில் உள்ள நீலகிரி மாவட்டம் மலை கிராமங்கள் தீவிரமாக சுகாதார துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது .

Also Read: கொரோனா.. ஜிகா.. இப்போ பறவைக்காய்ச்சல்... தொடரும் வைரஸ் தாக்குதல்: மூச்சுவிட முடியாமல் திணறும் கேரளா!