Tamilnadu

மாணவிகள் இருக்கும் வாட்ஸ் குருப்பில் ஆபாச வீடியோ; வசமாக சிக்கிய கணக்கு டீச்சர்; சென்னை போலிஸ் அதிரடி!

சென்னை திருமங்கலத்தில் லியோ பள்ளி செயல்பட்டு வருகிறது. மெட்ரிகுலேஷன் மற்றும் CBSE என இரண்டு வகுப்புகளிலும் LKG முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் ஏராளமான மாணாக்கர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேல்நிலை வகுப்புகளுக்கான கணித ஆசிரியராக அம்பத்தூரை சேர்ந்த மதிவாணன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற அரசு அறிவிப்பை தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இதற்காக மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்காக பள்ளியின் சார்பில் வாட்ஸ் அப் குரூப்பும் உள்ளது. அந்தக் குழுவில் 30 மாணவிகள், 30 மாணவர்கள், பள்ளியின் முதல்வர் ஜெஸ்ஸி சாரதி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த வாட்ஸ் அப் குழுவில் கணித ஆசிரியரான மதிவாணன் இரண்டு ஆபாச வீடியோக்களை பகிர்ந்திருக்கிறார். இதைப்பார்த்த மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்து பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளியின் முதல்வரும் அந்த குரூப்பில் இருப்பதால் அவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து, ஆசிரியர் மதிவாணணிடம் பள்ளியின் முதல்வர் ஜெஸ்ஸி சாரதி விசாரணை நடத்தியதில் தவறுதலாக ஆபாச வீடியோவை பகிர்ந்ததாக கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் மதிவாணனை பள்ளி நிர்வாகம் உடனடியாக பணி நீக்கம் செய்ததோடு அவர் மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில் தகவல் தொழில்நுட்பத்தை தவறுதலாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆசிரியர் மதிவாணன் மீது திருமங்கலம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

Also Read: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் சிறையில் அடைப்பு.. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை!