Tamilnadu

பழுது பார்க்கும் சாக்கில் 4 சவரன் நகை, ரூ.37,000-ஐ ஆட்டையப்போட்ட கேபிள் ஊழியர்கள்; அதிர்ந்து போன மூதாட்டி

சென்னை , கொடுங்கையூர், திருவள்ளுவர் நகர்வசித்து வரும் சாந்தி(57) என்பவர் கடந்த நவம்பர் 25ம் தேதியன்று அவரது வீட்டிலுள்ள கேபிள் டிவி இணைப்பு சரியாக இல்லை என அப்பகுதியிலுள்ள கேபிள் டிவி அலுவலகத்திற்கு செல்போன் மூலம் புகார் அளித்துள்ளார்.

அதனை அடுத்து சம்மந்தப்பட்ட கேபிள் நிறுவனத்திலிருந்து 3 ஊழியர்கள் சாந்தியின் வீட்டிற்கு சென்று கேபிள் இணைப்பு பழுது சரிபார்த்து விட்டு சென்றனர். பின்னர் சில நாட்கள் கழித்து சாந்தி அவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை சரி பார்த்தபோது, 4 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் ரூ.37,500 பணத்தை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.

அதன்பேரில், சாந்தி கொடுத்த புகாரின்பேரில், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சாந்தியின் வீட்டில் மற்றும் அருகில் வசிப்பவர்களிடம் விசாரணை செய்ததில், கேபிள் டிவி நிறுவன ஊழியர்கள் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.

Also Read: ஆன்லைன் வகுப்பின்போது வெடித்த செல்போன்.. 8ஆம் வகுப்பு மாணவனுக்கு ஏற்பட்ட கதி.. நடந்தது என்ன?

அதன்பேரில், காவல் குழுவினர் கேபிள் டிவி ஊழியர்களை ரகசியமாக கண்காணித்து, அவர்களை தீவிர விசாரணை செய்தபோது, மூவரும் சேர்ந்து புகார்தாரர் சாந்தியின் வீட்டில் 2 தடவை கேபிள் இணைப்பு பழுது பார்க்க சென்றபோது, அவரது வீட்டின் பீரோவில் இருந்த தங்கச்சங்கிலி மற்றும் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

அதன்பேரில், சாந்தியின் வீட்டில் நகை மற்றும் பணம் திருடிய கேபிள் நிறுவன ஊழியர்கள் மோகன் (44), ராஜா(35), மாரிமுத்து (31) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 25 கிராம் தங்க நகை மற்றும் ரூ.5,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் இன்று (டிச.,17) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Also Read: அசைவத்தல் ஈர்க்கப்பட்டு ரூ.3 லட்சத்தை கோட்டை விட்ட முதியவர்; மதுரை பாண்டி கோவிலில் நடந்த ருசிகர நிகழ்வு!