Tamilnadu

“₹1 கோடி மதிப்பிலான முந்திரி லாரியை கடத்திய வழக்கு..” : அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் மீது குண்டாஸ்!

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியிலுள்ள ஏற்றுமதி நிறுவனத்திலிருந்து ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு வந்த லாரியை, கடந்த நவம்பர் 26-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டலுரணி விலக்கு பகுதியில் காரில் வந்த நபர்கள் வழிமறித்து கடத்தி சென்றனர்.

இந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநரான தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த ஹரி (40) என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி ரூரல் உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து முந்திரிபருப்பு லாரியை கடத்தி சென்ற தூத்துக்குடியை சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.த‌.செல்லப்பாண்டியன் மகனான ஞானராஜ் ஜெபசிங் (39), பிரையண்ட் நகரை சேர்ந்த விஷ்ணுபெருமாள் (26), பாண்டி (21), மாரிமுத்து (30), செந்தில்முருகன் (35), பாளையங்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார் (26), மனோகரன் (36) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.

மேலும், கடத்தப்பட்ட ரூ.1கோடியே 10 லட்சம் மதிப்பிலான முந்திரி பருப்பு, ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலிஸார் பறிமுதல் செய்தனர்.

மேற்படி இவ்வழக்கின் அ.தி.மு.க முன்னாள் தொழிலாளர் துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் ஞானராஜ் ஜெபசிங் என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார். மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில் ராஜ் ஞானராஜ் ஜெபசிங் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் மேற்படி ஞானராஜ் ஜெபசிங்கை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.

Also Read: “₹1கோடி முந்திரி கடத்தல்.. அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் உட்பட 7 பேர் கைது”: அதிரவைத்த கடத்தல் சம்பவம்!