Tamilnadu

"பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் Panic Button" - போக்குவரத்துத் துறை அமைச்சர் அசத்தல் தகவல்!

சென்னையில் முதற்கட்டமாக 2100 அரசு பேருந்துகளில் Panic Button எனும் அவசர ஒலி அழைப்பு அமைக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது, ”நிர்பயா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பேருந்திலும் மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதேபோல ஒவ்வொரு பேருந்திலும் 4 அவசர அபாய ஒலி எழுப்பும் பட்டன் அமைக்கப்படும். இதன் மூலம் பணிமனைக்கு தகவல் உடனடியாக பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அரசு பேருந்துகளில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க இலவச அழைப்பு எண்களை அனைத்து பேருந்துகளிலும் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

பேருந்துகளில் வயதானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், நரிக்குறவர்கள் என பல தரப்பினரும் பயணம் செய்வார்கள். ஆனால் சில நடத்துனர்கள் அவர்களை இறக்கிவிடுகின்றனர். எனவே ,இது தொடர்பாக நடத்துனர் ஓட்டுநர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் பள்ளி கல்லூரி செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்குவது, ஆர்.டி.ஓ மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தீபாவளி போன்று பொங்கலுக்கும் சிறப்பு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும். 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் 29 ம் தேதி அங்கீகரிக்கப்படும் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

Also Read: மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் புதிய Rights திட்டம் : சிறப்பம்சங்கள் என்னென்ன?