Tamilnadu

மொபட்டில் வைத்து புகையிலை விற்பனை; கையும் களவுமாக சிக்கிய வடமாநிலத்தவர்; திருப்பூர் போலிஸ் அதிரடி !

திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையத்தில் உள்ள ஒரு பேக்கரி அருகே ஒருவர் மொபட்டில் வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக திருமுருகன்பூண்டி போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலிஸ் இன்ஸ்பெக்டர் (பொ) பதுருன்னிசா பேகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது அந்த பகுதியில் வடமாநில வாலிபர் ஒருவர் மொபட்டில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

இதையடுத்து அவரை மடக்கி பிடித்த போலிஸார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தல்பர்சிங் (வயது 38) என்பதும், தற்போது அவினாசி பகுதியில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது. மேலும் போலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவினாசி கைகாட்டிபுதூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (38) என்பவரிடம் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வெளியில் விற்பனை செய்வதாக தல்பர்சிங் போலிஸாரிடம் தெரிவித்தார்.

Also Read: “நீங்கதான் கடவுள்”: மலை கிராம மக்களிடையே உணர்ச்சி பொங்க பேசிய லெப்.ஜெனரல் அருண்: இலவச சிகிச்சை அறிவிப்பு!

இதையடுத்து போலிஸார் தல்பர்சிங்கை அழைத்து கொண்டு மகேந்திரன் கடைக்கு சென்றனர். அங்கு போலிஸார் சோதனை நடத்தியபோது மூட்டையில் ஏராளமான புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலிஸார் தல்பர்சிங், மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 500 கிலோ புகையிலை பொருட்களை போலிஸார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் திருப்பூர் வடக்கு போலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோல்டன்நகர் பகுதியில் வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக சங்கர்கணேஷ் (37) என்பவரை திருப்பூர் வடக்கு போலிஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி மற்றும் திருப்பூர் வடக்கு போலிஸார் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: GST மோசடி: பக்கத்துவீட்டுக்காரரின் ஆதாரை வைத்து தப்பியோடிய தென்கொரியர்கள் - சென்னை அருகே நடந்தது என்ன?