Tamilnadu

விடாமல் ஆய்வில் ஈடுபடும் முதலமைச்சர்... துரிதமாக சீர்செய்யப்பட்டு வரும் வெள்ள பாதிப்புகள்!

கனமழையால் பாதிக்கப்பட்ட போரூர், மாங்காடு, அய்யப்பன்தாங்கல், தனலட்சுமி நகர் ஆகிய பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த போரூர், மாங்காடு, அய்யப்பன்தாங்கல், தனலட்சுமி நகர் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

கடந்த நவம்பர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 7-ஆம் தேதி தொடங்கி இதுநாள்வரை தொடர்ந்து இரவு, பகல் பாராமல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, அதன்படி பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்து வருகின்றார்.

தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்த போதிலும் முதலமைச்சர் அவர்களுடன், அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் முதல் அனைத்துத் துறைச் செயலாளர்கள், அலுவலர்கள், முன்களப் பணியாளர்கள் என அனைவரும் களத்தில் நின்று அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருவதாலும், பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி வருவதாலும் வெள்ளப் பாதிப்புகள் துரிதமாக சீர்செய்யப்பட்டு வருகிறது.

Also Read: “மழை கொட்டினாலும் இனி பாதிப்பே ஏற்படாமல் தடுப்போம்”: ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!