Tamilnadu

"வதந்திகளை நம்பாதீங்க.. ஒமைக்ரான் குறித்து அரசு வெளிப்படையாக இருக்கும்": அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

ஒமைக்ரான் தொற்று குறித்த வதந்திகளை நம்பவேண்டாம். ஒமைக்ரான் தொற்றால் யாராவது பாதிக்கப்பட்டால் அரசு இதுகுறித்து வெளிப்படையாகத் தெரிவிக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "ஒமைக்ரான் தொற்று பரவியுள்ள நாடுகளிலிருந்து வருபவர்களும், மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளை முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இதில், தொற்று யாருக்காவது உறுதியானால் அவர்களைத் தங்கவைக்க மருத்துவமனைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, கோவை மாவட்டங்களில் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளna.

சிங்கப்பூரிலிருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரின் ரத்த மாதிரிகளைப் பெங்களூருவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவு வந்த பிறகு அவர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பது குறித்துத் தெரிவிக்கப்படும்.

அதேபோல், பிரிட்டனிலிருந்து சென்னை வந்த சிறுமிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ஒமைக்ரான் எதிரொலி.. பள்ளிகளுக்கு புதிய உத்தரவிட்ட பள்ளிக் கல்வித்துறை!