Tamilnadu

ஆற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெண்... காப்பாற்றிய போலிஸாருக்கு குவியும் பாராட்டு : நடந்தது என்ன?

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி மல்லிகா. இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையடைந்த மல்லிகா அருகே உள்ள வைகை ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த போலிஸார் பாலமுருகன், ராஜேஸ் ஆகியோர் மல்லிகா ஆற்றில் இறங்குவதைப் பார்த்துள்ளனர். உடனே போலிஸாரும் ஆற்றில் இறங்கி அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது அவர் தற்கொலை செய்துகொள்ள வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் மல்லிகாவிடம் சாமர்த்தியமாகப் பேசி அவரை கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரது கணவரை வரவழைத்து எச்சரிக்கை செய்து இருவரையும் அனுப்பிவைத்தனர்.

ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய போலிஸாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் உயரதிகாரிகளும் இரண்டு போலிஸாரின் இந்தச் செயலைப் பாராட்டியுள்ளனர்.

Also Read: தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஹெலிகாப்டர் பிடித்து வந்த மகன்.. புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்!