Tamilnadu

’செம்மொழி நூலகம்’ : மிக & பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற திமுக அரசின் சீர்மிகு திட்டம் ; அரசாணை வெளியீடு!

கல்லூரி விடுதிகளில் தங்கி பயின்று வரும் மாணவ மாணவியரின் கல்வி அறிவு மற்றும் பொது அறிவினை வளர்க்கவும், வாழ்க்கையில் சிறப்பான முறையில் முன்னேற்றம் அடைவதை நோக்கமாகக் கொண்டும், பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதகளில் தலா ஒரு நூலகம் ( செம்மொழி நூலகம் ) என்ற பெயரில் 2 கோடியே 73 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

செம்மொழி நூலகம் அமைப்பது தொடர்பாக மாநில அளவில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவில் பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இயக்குனர், பொது நூலகத் துறை இயக்குனர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அல்லது அவரால் நியமிக்கப்படும் பிரதிநிதி, கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்/ அலுவலர் உள்ளிட்ட 8 நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு நூலகத்தில் தலைசிறந்த மற்றும் தரமான புத்தகங்களை தேர்வு செய்யவும், புத்தக அலமாரி, நீளவாக்கு மேஜைகள், நாற்காலிகள் ஆகியவற்றை திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1988 மற்றும் விதிகள் 2009 கொள்முதல் செய்து வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, நிர்வாக நலன் கருதி இக்குழுவை மாற்றியமைக்க பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனருக்கு அனுமதி வழங்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது..

அந்த வகையில், 275 பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம் அமைப்பதற்காக மொத்தம் ரூ.2 கோடியே 74 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.