Tamilnadu

“நெசவாளர்கள் நலனுக்காக இதுவரை செய்யப்பட்டது என்ன?” : எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதில்!

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி பதிலறிக்கை விடுத்துள்ளார்.

கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி விடுத்துள்ள அறிக்கையில், “சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் 24.11.2021 நாளிட்ட அறிக்கையில் நூலின் பங்கு ஆடை தயாரிப்பில் இன்றியமையாததாக இருந்து வருகிறது என்றும், கடந்த சில மாதங்களாக நூல் விலை உயர்ந்து வருகிறது என்றும், இந்த விலை உயர்வால் ஆடை தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் என்றும், ஜவுளித் தொழிலுக்கு மூலப் பொருட்களான பஞ்சு மற்றும் நூல் விலை ஏற்றத்தினை தடுக்கவும், இறக்குமதி பஞ்சுக்கான வரியினை குறைக்கவும், மூலப்பொருள் ஏற்றுமதியினை தடை செய்யவும், நூலுக்கு மானியம் வழங்கவும், நூல் மற்றும் பஞ்சு மீதான 5% GST வரியினை ரத்து செய்யவும், வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு தேவையான நூலினை வழங்கவும், வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மேற்படி அறிக்கையில் ஜவுளித் தொழில் சார்ந்த பல்வேறு புள்ளிவிவரங்களும் திட்டங்களின் விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசால் ஜவுளித் தொழிலை பாதுகாக்கவும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும் இவ்வரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

  1. தள்ளுபடி மானிய திட்டத்தின்கீழ் கடந்த ஆட்சியில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு விடுவிக்கப்பட வேண்டிய தள்ளுபடி மானியத் தொகையினை விடுவிக்கப்படாமல், நிலுவையில் இருந்த தள்ளுபடி மானியத் தொகையினை விடுவிக்கும் பொருட்டு, நடப்பாண்டில் இத்திட்டத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.150 கோடியுடன், கடந்த ஆட்சியின் நிலுவை தள்ளுபடி மானியத் தொகை ரூ.160.11 கோடியினையும் கூடுதலாக சேர்த்து இவ்வரசால் மொத்தம் ரூ.310.11 கோடி விடுவித்து ஆணையிடப்பட்டுள்ளது.

  2. கைத்தறி நெசவாளர்களின் நெசவுக்கான அடிப்படை கூலியில் 10 சதவீதமும் அகவிலைப்படியில் 10 சதவீதமும் ஒட்டுமொத்தமாக உயர்த்தி வழங்க இவ்வரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அடிப்படை கூலியும், அகவிலைப்படியும் ஒரே ஆண்டில் உயர்த்தப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  3. கைத்தறி மற்றும் பெடல் தறி நெசவாளர்களுக்கு வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.3.67 கோடி அளவிற்கும்,
    பள்ளி மாணவர்களுக்கான சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ்
    ரூ.75 இலட்சம் அளவிற்கும் நடப்பாண்டில் இவ்வரசால் நெசவுக்கு முந்தைய கூலி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

  4. கடந்த ஆட்சியில் 365 சதுர அடியில் ரூ.2.60 இலட்சம் செலவில் கட்டப்பட்ட வீடுகளுக்கு பதிலாக நெசவாளர்களுக்கு தலா 365 சதுர அடி பரப்பளவில் தலா ரூ.4 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

  5. தமிழ்நாட்டில் பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு மீது விதிக்கப்பட்டு வந்த 1% விவசாய விற்பனைக் குழு செஸ் வரியினை முழுமையாக இரத்து செய்து இவ்வரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம், நூற்பாலைகளின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

  6. இயங்கும் கூட்டுறவு நூற்பாலைகளில் உள்ள நூற்பாலைகளில் உள்ள cardwires, cots and Aprons போன்ற உதிரி பாகங்களை மாற்றுவதற்கு 2019-ம் ஆண்டில் அரசாணை எண்.19,
    நாள் 28.01.2019-ன்படி ரூ.2.07 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. மாறாக எதிர்கட்சி தலைவர் தனது அறிக்கையில் ரூ.2076 கோடி விடுவிக்கப்பட்டதாக தவறான தகவல் தெரிவித்துள்ளார்.

  7. கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்துடனும், வேட்டி சேலை வழங்கும் திட்டம் ஒவ்வொரு ஆண்டும், ஜூன் அல்லது ஜூலை திங்களில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, திட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படுவது வழக்கமான நடைமுறை ஆகும்.

எனினும், கடந்த காலங்களில் 2011-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, 2012-13 மற்றும் 2013-14 ஆண்டுகளில் பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்படவேண்டிய வேட்டி சேலைகள் முறையே அக்டோபர் 2012-லும், மார்ச் 2013-லும், ஆகஸ்டு 2014-லும் முன் எப்போதும் இல்லாத வகையில் வெகுதாமதமாக பயனாளிகளுக்கு விநியோகம் செய்து முடிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கான அரசாணை ஜூலை 2021 திங்களில் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி 180.42 இலட்சம் சேலைகள் 180.09 இலட்சம் வேட்டிகள் விநியோகத்திற்கான உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டு, துரிதமாக உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  1. மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் அவர்கள் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அவர்களால் 23.11.2021 அன்று தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், தென்னிந்திய சிறு நூற்பாலைகள் சங்கம் உள்ளிட்ட நூற்பாலைத் துறையினருடன் கோயம்புத்தூரில் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டு, நூல் விலையினை குறைக்கவும், வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு தேவையான நூலினை தடையின்றி வழங்கவும் நூற்பாலைகள் உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  2. இதுகுறித்து ஒன்றிய அரசின் ஜவுளித் துறை அமைச்சர் அவர்கள் 18.11.2021 அன்று பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு மற்றும் பதுக்கலை தவிர்க்குமாறு நூற்பாலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ஒட்டுமொத்த ஜவுளி தொழிலை பாதுகாக்கும் வகையில் நூல் விலையினை கட்டுக்குள் வைக்கவும், தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி, விசைத்தறி மற்றும் பின்னலாடை தொழிலாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பினை உறுதி செய்வதற்கும் தமிழ்நாடு அரசால் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “10, +2 பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை” : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்!