Tamilnadu

'புதுச்சேரி பாகூர் தொகுதி புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நூலகம்' - தி.மு.க எம்.எல்.ஏ அசத்தல்!

புதுச்சேரி மாநிலம் பாகூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க உறுப்பினர் இரா.செந்தில்குமாரின் அலுவலகத்தை அம்மாநில சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா.சிவா திறந்து வைத்தார்.

பாகூர் தொகுதி மக்களின் நலனுக்காகவும், தொகுதியின் வளர்ச்சிக்காவும், மக்களின் குறைகளை உடனே களைவதற்கு ஏதுவாக பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், பாகூர் காவல் நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் முந்தைய குருவிநத்தம் சட்டமன்ற தொகுதியின் பெரும் பகுதியையும், பாகூர் (தனி) தொகுதியில் பாகூர் ஊரையும் இணைத்து பாகூர் சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது.

இவ்விரு சட்டமன்றத் தொகுதிகளில் இருந்தும் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினர்களின் சேவையையும், தியாகத்தையும் போற்றும் விதமாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலக அரங்கத்திற்கு தியாகி கே.ஆர்.சுப்பிரமணியன் பெயரும், அலுவல் அறைக்கு தியாகி தங்கவேல் கிளமெண்ட்சோ பெயரும், சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கலந்தாய்வு அறைக்கு தியாகி ஆர்.எல்.புருஷோத்தமன் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

இதைப்போன்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்கள், மாணவர்களின் நலனுக்காக நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்திற்கு உள்ளூர் எழுத்தாளரான கல்வெட்டு ஆய்வறிஞர் பாகூர் குப்புசாமி அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களின் நூல்களும், வரலாற்று அறிஞர்களின் நூல்களும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நூலகத்தை பாகூர் குப்புசாமியின் குடும்பத்தினரை வைத்து திறக்க வைத்துள்ளார் செந்தில்குமார் எம்.எல்.ஏ.

தி.மு.க. எம்.எல்.ஏ., செந்தில்குமாரின் இந்த அசத்தலான செயலை தமிழார்வலர்களும், எழுத்தாளர்களும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

இந்த காலை நடந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் இரா.செந்தில்குமாரின் அலுவலகம் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களின் உருவப்படங்களை புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அம்மாநிலத்தின் தி.மு.க அமைப்பாளருமாகிய இரா.சிவா திறந்து வைத்தார்.

விழாவில் தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, வழக்கறிஞர் சம்பத், பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கர், தொகுதி செயலாளர் அரிகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பாகூர் தொகுதி பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

புதிய சட்டமன்ற அலுவலகத்தில் நூலகம் திறப்பு பற்றி பாகூர் எம்.எல்.ஏ இரா.செந்தில்குமார் கூறுகையில், “அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் ஒரு முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமாக, பாகூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அலுவலகம் நிச்சயம் அமையும். பொதுமக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும், மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக எனது அலுவலகத்தில் நூலகம் அமைத்துள்ளேன். உள்ளூர் எழுத்தாளர்கள் போற்றப்பட வேண்டும் என்பதற்காக கல்வெட்டு ஆய்வறிஞர்- எழுத்தாளர் பாகூர் குப்புசாமி பெயரில் இந்த நூலகத்தை நிறுவி, அவரது குடும்பத்தினரை வைத்து திறக்க வைத்தேன்.

இந்த சிந்தனை எனக்குள் தோன்ற காரணம் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான். அவர்தான் தன்னை சந்திக்க வருபவர்கள் சால்வை, மலர் கொத்துக்களுக்கு பதிலாக புத்தகங்களை அளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தி அதை செயல்படுத்தி வந்தார். அவரது வழியில் மக்களின் அறிவுப்பசியை போக்கவும், மாணவர்கள் சமுதாயத்தில் தலைசிறந்து விளங்கவும் நூலகம் அமைத்துள்ளேன் ” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: யூடியூப் பிரபலம் 'டாடி' ஆறுமுகத்தின் மகன் உட்பட 3 பேரை கைது செய்த புதுச்சேரி போலிஸ்... நடந்தது என்ன?