Tamilnadu

ரூ.3 கோடி மோசடி விவகாரம்: ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஆடியோ ஆதாரம் தாக்கல்!

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்ககூடாது என பாதிக்கப்பட்ட ரவீந்தரன் என்பவர் ஆடியோ ஆதாரங்களோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி  ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்கள் கடந்த முறை நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வேலைக்காக பணம் வாங்கியது தவிர, கொலை திட்டத்திலும் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், அவர் ஒரு தொடர் குற்றவாளி என்றும் தெரிவித்தார்.

Also Read: சாக்லேட் ஆசை காட்டி 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; கழுத்தை நெறித்து சாக்கடையில் வீசிய கொடூரர்கள்!

இரு வழக்கிலும் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என புகார்தாரர்கள் தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய இருப்பதால், அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இடையீட்டு மனுதாரர்கள் மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் இடையீட்டு மனுதாரர் ரவீந்திரன் சார்பில் ஆடியோ ஆதாரங்களுடன் ராஜேந்திர பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் விஜய நல்லதம்பி உடன் பணம் கொடுத்ததற்கான, ஆதாரங்கள், ஆடியோ ஆதாரங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பு வாதத்திற்காக, வழக்கு விசாரணை வரும் 31ஆம் தேதி ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Also Read: “குழந்தைகளுக்கு எதிரான உரிமைமீறல்.. ஈஷாவிற்கு எதிராக மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவு” : ஐகோர்ட் அதிரடி!