Tamilnadu

குடிக்க வைத்து கொலை; காணாமல் போன இளைஞர்கள் வழக்கில் திடீர் திருப்பம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

வேலூர் மாவட்டம், வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் நேசகுமார். இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவர்கள் இருவரும் கடந்த 10ம் தேதியிலிருந்து காணவில்லை. இது குறித்து அவர்களது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து நேசகுமாரின் நண்பர் பாலாவிடம் சந்தேகத்தின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது, நண்பர்களுடன் சேர்ந்து நேசகுமாரை கொலை செய்து பாலாற்றில் வீசியதாக , பாலா கூறியதை கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நூற்பாலை தொழிலாளி கடத்தல் வழக்கில் கவுதம் என்பவரை போலிஸார் கைது செய்தனர். கைதான கவுதமுக்கும், நேசகுமாருக்கும் ஊரில் யார் பெரிய ரவுடி என்பதில் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் கவுதமை கொலை செய்யப்போவதாக நேசகுமார் கூறிவந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த கவுதம் நண்பர்கள் நேசகுமாரை கொலை செய்யதிட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி பாலா நேசமித்திரனை அழைத்துச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் குடித்துள்ளனர்.

அப்போது, பாலா, அவரது நண்பர்கள் ஆகாஷ், சரத் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து நேசகுமார் மற்றும் அவருடன் வந்த விஜய் ஆகிய இரண்டு பேரையும் கொலை செய்து கால்களைக் கட்டி உடலைப் பாலாற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலிஸார் பாலா, ஆகாஷ், சரத் ஆகிய மூன்று பேரிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also Read: காதலை ஏற்க மறுத்ததால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. காதலனும் தற்கொலை முயற்சி: ஆந்திராவில் பரபரப்பு!