Tamilnadu

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூத்துக்குடி பள்ளி மாணவி... ஏன் தெரியுமா?

பருவமழை காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. அம்மாவட்டத்தில் அதி கனமழை நீடிக்கும் என்று ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிப்புகளை பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்றார். சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற முதலமைச்சர், சாலை வழியாக கன்னியாகுமரி மாவட்டத்துக்குச் சென்றார்.

கன்னியாகுமரி செல்லும் வழியில், தூத்துக்குடி மாவட்ட எல்லையான தோட்டிலோவன்பட்டி விலக்கு அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இந்நிகழ்வின்போது, கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளி மாணவ, மாணவிகள் முதலமைச்சரை வரவேற்பதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது மாணவ-மாணவிகளைக் கண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வாகனத்தை நிறுத்தி, பள்ளி மாணவி பி.சந்தோஷினி அளித்த வைரமுத்து கவிதைகள் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்.

பின்னர் மாணவியிடம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பள்ளிகள் திறந்து பாடம் நடத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அப்போது முதலமைச்சர் மு.ஸ்டாலின் அவர்களிடம் அந்த மாணவி, நீண்ட நாட்களாக நாங்கள் ஆன்லைனில் பாடம் கற்று வந்தோம். தற்போது பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் நடப்பதால் உற்சாகமாகப் படித்து வருகிறோம். பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டதற்கு நன்றி எனத் தெரிவித்தார்.

Also Read: “இப்படியா அபாண்டமாக பொய் சொல்வது?” : பிரதமர் மோடியை சாடும் கே.எஸ்.அழகிரி!