Tamilnadu

வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடுகளுக்கே சென்று உணவு... நிவாரணப் பணிகளில் அசத்தும் சென்னை மாநகராட்சி!

சென்னையில் இந்தாண்டு வரலாறு காணாத வகையில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் 11 நாட்களிலேயே வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில், இன்று கரையைக் கடந்து வருகிறது. இதனால் மழை படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் சென்னையின் குடியிருப்புப் பகுதிகள், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, சென்னை மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட சென்னை மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

அதன்படி, சென்னை மாநகராட்சி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகிக்க 200 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்கவைப்பதற்காக நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள் மற்றும் வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளவர்கள் என லட்சக்கணக்கானோருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளிலேயே உணவு வழங்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Also Read: வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு... சென்னையை புரட்டியெடுத்த மழை : புள்ளி விவரங்களை வெளியிட்ட வெதர்மேன்!