வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில், இன்று கரையைக் கடந்து வருகிறது. இதனால் சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த ‘ரெட் அலெர்ட்’ நீக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இந்தாண்டு வரலாறு காணாத வகையில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. சென்னையில் நவம்பர் மாதத்தின் முதல் 11 நாட்களிலேயே வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் பதிவான அளவின்படி சென்னையில் நவம்பர் முதல் 11 நாட்களிலேயே 709 மி.மீ மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ‘வெதர்மேன்’ எனப்படும் பிரதீப் ஜான், “வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த 1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெள்ளப்பெருக்கின்போது 1,101 மி.மீ. மழை பெய்தது.
கடந்த 2005 ஆம் ஆண்டு 1,078 மி.மீ.யும் 2015ஆம் ஆண்டு 1,049 மி.மீ. மழையும், 2021 ஆம் ஆண்டு நவம்பரில் இன்று மதியம் 1.30 மணி வரை 709 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இந்த மாதம் முடிய இன்னும் 19 நாட்கள் உள்ளன. கடந்த 200 ஆண்டுகளில் 4 முறை மட்டுமே 1,000 மி.மீ. மழை அளவை சென்னை நுங்கம்பாக்கம் தாண்டியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதத்தில் இன்னும் 19 நாட்கள் இருக்கும் நிலையில், மழைப்பொழிவு வரலாறு காணாத அளவை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.