Tamilnadu

‘கோஷம் போடுங்க தப்பில்ல.. திருப்பி போட்டா தாங்கணும்’ : வம்பு செய்தவர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

‘பாரத் மாதா கி ஜே’ என கோஷமிட்ட பா.ஜ.கவினர், சேகர்பாபு வந்ததும் உடனடியாக பிளேட்டை திருப்பிப் போட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி பல்வேறு பகுதிகளிலும் நீர் தேங்கியிருந்த இடங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. மேலும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில் வெள்ள நிவாரணப் பணிகளைப் பார்வையிட ஜீப்பில் வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பார்த்ததும் பா.ஜ.கவினர் பலர் ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோஷமிட்டனர்.

இதையடுத்து, அமைச்சர் சேகர்பாபு கோஷமிட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து என்ன அரசியல் செய்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

கோஷமிட்டவர்கள் அப்படியே அடங்கி, “இல்லண்ணா, இல்ல… அரசியல் எல்லாம் செய்யல மனு கொடுக்க தான் வந்தோம்” என்று பேச்சை மாற்றினர். அவர்களிடம் "கோஷம் போடுங்க தப்பில்ல.. நாங்க போட்டா தாங்கணும்" எனக் கூறினார் சேகர்பாபு.

பிறகு ஒருவர் மட்டும் மனு அளிக்க வாருங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் அமைச்சர் சேகர்பாபு. கோஷமிட்ட பா.ஜ.கவினர், உடனடியாக பிளேட்டை திருப்பிப் போட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Also Read: “வீடியோ எப்போ சார் ரிலீஸ் பண்ணுவீங்க?”: அண்ணாமலையை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்- ட்ரெண்டாகும் #GoatonBoat