Tamilnadu

“பூச்சிக்கொல்லி மருந்தால் நோயாளிகளின் கூடாரமாக மாறிய காசர்கோடு” : கேரள மக்களுக்கு நீதி கிடைத்ததா ?

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் அம்மாநில அரசுக்கு சொந்தமான 4,700 ஏக்கர் முந்திரி காடுகளில் அப்பகுதியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 1978 முதல் 2001-ம் ஆண்டு வரை காசர்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் அரசு முந்திரித் தோட்டங்களில் ஹெலிகாப்டர் மூலம்' எண்டோசல்பான்' எனும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது.

மேலும், பாலக்காடு மாவட்டத்தில் மாம்பழத் தோட்டங்களிலும் விவசாயிகளால் அதிக அளவில் ‘எண்டோசல்பான்' தெளிக்கப்பட்டது. இதனால் காற்றில் இந்த பூச்சிக்கொல்லி மருந்து அப்பகுதி முழுவதும் பரவியது. மேலும் இவை அப்பகுதி நீர் ஆதாரங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பரவியது. இதன் விளைவு, வனவிலங்குகள், பறவை, தேனிக்கள், பட்டாம்பூச்சி என பல உயிரிழனங்கள் அழிந்தனர்.

அதோடு இல்லாமல், அப்பகுதி மக்கள் உடல் குறைபாடு உடையவர்களாகவும், புற்றுநோயாளிகளாகவும் மாறினர். இதனால் அப்பகுதிகளில் இப்போதும் பிறக்கும் பல குழந்தைகள் பல்வேறு குறைபாட்டுகளுடனேயே பிறக்கின்றனர். இதில் காசர்கோடு மாவட்டம் அதிக அளவிலும், அதற்கு அடுத்த நிலையில் பாலக்காடு மாவட்டமும் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அம்மாவட்ட மக்கள் அப்போதிருந்த அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

பிறகு விபரீதத்தை உணர்ந்த கேரள அரசு, உடனடியாக எண்டோசல்பானுக்கு தடை விதித்தது. அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் நாடு முழுவதும் எண்டோ சல்பானுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார். அவரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், நாடு முழுவதும் எண்டோசல் பானுக்கு 2011-ம் ஆண்டு மே 13-ம் தேதி இடைக்காலத் தடை விதித்தது. கேரள மாநிலத்தையே உலுக்கிய எண்டோசல்பானால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு, மருத்துவ உதவிகள், நிவாரணம் ஆகியவற்றை வழங்க தேசிய மனித உரிமை ஆணையம்கேரள அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, இந்த பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டதனால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம், நிரந்தரப் படுக்கை நோயாளிகளுக்கு ரூ. 5 லட்சம், சிறிய அளவில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்பனவும் கூறப்பட்டது.

இதனையடுத்து அன்மையில் இதுதொடர்பாக பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு அம்மாநில சமூக நீதி அமைச்சர் பிந்து கூறுகையில், “எண்டோசல்பானால் பாதிகப்பட்ட 3,014 பேருக்கு சுமார் 120 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஆட்சியின் போது, எண்டோசல்பானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுதானந்தன் காலத்தில் இருந்தே நிவாரணமும், வாழ்க்கை புனரமைப்புத் திட்டங்களும் செயல் படுத்தப்பட்டு வருகிறன்றன. தகுதியானவர்களுக்கு உரிய நிவாரணமும், இழப்பீடும் கிடைக்க எப்போதுமே இடதுசாரிகள் துணை நிற்போம்” என அக்கட்சியைச் சார்ந்த தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: நடிகர் விஜய்சேதுபதி மீது தாக்குதல்.. ரசிகர்கள் கடும் கண்டனம் - வீடியோ !