Tamilnadu

கட்டுப்பாட்டை இழந்து கார் மீது கவிழ்ந்த சரக்கு லாரி: திருமணமாகி 4 நாள் ஆன புதுமண தம்பதி உடல் நசுங்கி பலி!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவருக்கும் சென்னை அடுத்த பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திகா என்பவருக்கும் கடந்த 28ம் தேதி திருமணம் நடைபெற்றது.

பிறகு திருமணம் முடிந்து புதுமண தம்பதிகள் பெருங்களத்தூரில் உள்ள கார்த்திகாவின் வீட்டிற்கு மறுவீடு சென்றனர். பின்னர் நேற்று இரவு தம்பதிகள் காரில் அரக்கோணம் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், பூந்தமல்லி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார் மீது கவிழ்ந்தது. இதில் லாரிக்கு அடியில் கார் சிக்கி நொறுங்கியதால் புதுமண தம்பதிகள் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இருவர் உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சாலை விபத்தால் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்தித் தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரை போலிஸார் தேடி வருகின்றனர். திருமணமான நான்கு நாட்களிலேயே புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "கொரோனா காலத்தில் 11,396 குழந்தைகள் தற்கொலை": NCRB வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!