Tamilnadu

ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... பெற்றோரின் கவனக்குறைவால் ஏற்பட்ட சோகம்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சேதுவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் ரூபலட்சுமி. இவர் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பெற்றோர் இல்லாதபோது ரூபலட்சுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த சேலை ஒன்றை எடுத்து ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென சேலை சிறுமியின் கழுத்தைச் சுற்றிக் கொண்டு இறுக்கியதில் மயக்கமடைந்து சரிந்துள்ளார். பிறகு வெளியே சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது சிறுமி சேலையில் கழுத்தைச் சுற்றிய நிலையில் மயங்கி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனே சிறுமியை அருகே இருந்த மருத்துவமனைக்குப் பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.

மருத்துவர்கள் கூறியதைக் கேட்டுப் பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் மருத்துவமனையில் இருந்தவர்களை சோகத்தில் மூழ்கடித்தது. இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: பெற்றோர்களே உஷார்.. நீச்சல் குளம் அருகே விளையாடிய 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி: சென்னையில் நடந்த சோகம்!