Tamilnadu

கரடிப்பட்டி டு ஹைதராபாத் IIT.. அரசுப் பள்ளி மாணவரின் முழு கல்விச் செலவையும் ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர், விரைவில் ஹைதராபாத் ஐ.ஐ.டியில் படிக்கவிருக்கிறார். அவரது கல்வி செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னழகன், பூவாத்தாள் தம்பதியரின் மகன் அருண்குமார் (17), செவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்.

அருண்குமார் சமீபத்தில் நடைபெற்ற ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்று, 17,061-வது இடமும் ஜே.இ.இ மெயின் தேர்விலும் தேர்ச்சி பெற்று 12,175-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

அருண்குமார், இந்த ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT-ஹைதராபாத்) பொறியியல் படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்நிலையில், மாணவர் அருண்குமாரின் குடும்ப நிலை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அருண்குமாரை குடும்பத்தோடு நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்தினார்.

எளிய பின்புலத்திலிருந்து வந்து, அரசுப் பள்ளியில் படித்து இச்சாதனையை நிகழ்த்திய மாணவரைப் பாராட்டிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மேற்படிப்புக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என உறுதியளித்தார்.

Also Read: “2 மாநில மக்களின் நலன் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!