Tamilnadu

”பல துறைகளில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு” - திமுக அரசுக்கு சென்னை ஐகோர்ட் பாராட்டு!

தமிழ்நாடு பல துறைகளில் முன்னணி மாநிலமாக திகழ்வதாக தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம், கடையாம்பட்டி தாலுகாவில் உள்ள தாத்தையாம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி, வீடில்லா ஏழை மக்களுக்கு ஒதுக்க கோரி, வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட அந்த நிலம், பள்ளி கட்டிடம் கட்ட ஒதுக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு தாசில்தாரரால் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், தமிழ்நாடு பல துறைகளில் முன்னணி மாநிலமாக திகழ்வதாக பாராட்டு தெரிவித்த நீதிபதிகள் மக்கள் நல அரசு வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்க வேண்டுமென தெரிவித்தினர். அதேசமயம் அனைத்தும் இலவசமாக கிடைக்கும் என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் தெளிவுபடுத்தினர்.

வீட்டு மனை ஒதுக்க கோரி மீண்டும் புதிதாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்ப மனுதாரருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

அதேசமயம் தமிழகம் முழுவதும் வீடற்ற ஏழை மக்களுக்கு நிலம் அல்லது வீடு வழங்குவது தொடர்பாக விரிவான செயல்திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இதற்காக மாவட்டவாரியாக நிலங்களை அடையாளம் காணவும் வலியுறுத்தினர்.