Tamilnadu

"மோடி அரசின் பேராசையே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம்": ப.சிதம்பரம் கடும் தாக்கு!

இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. அதேபோல் வரலாறு காணாத வகையில் முதல்முறையாக டீசல் விலையும் 100 ரூபாயை தாண்டிவிட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள். அதேபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மறைமுகமாக மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்களின் தலையில் இடியாக விழுந்துள்ளது.

பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் என தி.மு.க, காங்கிரஸ், சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். ஆனால் மோடி தலைமையிலான ஒன்றிய அரசோ மவுனம் காத்து வருகிறது. மேலும், பா.ஜ.க அமைச்சர்களும் தலைவர்களும் "பெட்ரோல் விலை எல்லாம் ஒரு விலை உயர்வா என்றும் பெட்ரோல் விலை உயர்ந்தால் சைக்கிள் பயன்படுத்துங்கள்" என பேசி வருகிறார்கள்.

இந்நிலையில், நாட்டில் உயர்ந்திருக்கும் பெட்ரோல், டீசல் விலைக்கு ஒன்றிய அரசின் பேராசையே காரணம் என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், "வரி விதிப்பு என்பது ஒரு எல்லைக்குள் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, ஒரே பொருளின் மீது 33% வரியை விதிப்பது தவறானது.

கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் உலக வர்த்தகம் முடங்கியுள்ளது. மக்களிடம் கடன் சுமை அதிகரித்துள்ளது. தனிமனித சேமிப்பு குறைந்துள்ளது. இது அனைத்தும் நாட்டுக்கே விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணியாகும். பெட்ரோல் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. ஒன்றிய அரசின் பேராசையினாலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.

Also Read: "தமிழ்நாட்டில் முற்போக்கு முளைவிட்டு கிளம்பியிருக்கிறது": தி.மு.க ஆட்சிக்கு நன்மாறன் புகழாரம்!