Tamilnadu

பொருளாதார அடிப்படையில் EWS இடஒதுக்கீடா? : ஆசிரியர் கி.வீரமணி கிடுக்கிப்பிடி கேள்வி!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இல்லாத பொருளாதார அடிப்படையை இட ஒதுக்கீட்டில் புகுத்தியது எப்படி என்பது உள்பட சட்ட ரீதியான கேள்விகளை ஒன்றிய அரசின் வழக்குரைஞரை நோக்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் - ஏற்கெனவே நாம் எழுப்பியவைதான். சட்ட விரோதமான சட்டம் ரத்து செய்யப்பட்டு சமூகநீதி காப்பாற்றப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

உயர்ஜாதி ஏழைகளுக்கு மட்டும் 10 சதவிகித இட ஒதுக்கீடு, பொருளாதாரத்தில் அவர்கள் பின்தங்கியவர்கள் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய அரசமைப்புச் சட்டத் திருத்தம் (103 ஆவது திருத்தம் ஒன்றை அவசர அவசரமாகக்) கொண்டு வந்து - 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, மாநிலங்களவையில் போதிய பலம் பா.ஜ.க.வுக்கு இல்லை என்றாலும், கூட்டணி கட்சிகள் ஆதரவோடும், எதிர்க்கட்சியாகிய அ.தி.மு.க. போன்றவற்றின் ஆதரவோடும், எதிர்த்து வாக்களிக்காமல் இருக்கும்படி அவர்களை ‘ஆக்கிவிட்டு’ நிறைவேற்றி - ஒரு வாரத்தில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் உட்பட பெற்று, கல்வி, வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்குள்ள 27 சதவிகிதத்தினைப் பறிக்கும் வகையில், அந்த இடங்களை (பல்கலைக் கழகங்கள் உள்பட) நிரப்ப நிதியை உடனடியாக ஒதுக்கினர்.

சட்டப்படி தவறானதே!

அந்த சட்டத் திருத்தமே அரசமைப்புச் சட்டப்படி செல்லுமா? காரணம், அது அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே தகர்க்கிறது (Basic Structure of the Constitution) என்பதை நாம் பலமுறை சுட்டிக்காட்டினோம். உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கே போட்டது. உண்மையான பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகிதத்தையே சரி வர நிறைவேற்றாத நிலையில், உயர்ஜாதியினருக்கு வழங்க அவசர ஏற்பாடுகள் செய்வது சமூகநீதிக்கு எதிரானது; அரசமைப்புச் சட்டப்படி தவறானது என்பதை சுட்டிக்காட்டத் தவறவில்லை.

பிற்படுத்தப்பட்டவர்களை ‘‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்‘’ அடையாளம் காணுவது மட்டுமே அரசமைப்புச் சட்டப்படி சரியானது என்று விளக்கி, வழக்குப் போடப்பட்டது.

பிற்படுத்தப்பட்டவர்களை ‘‘பொருளாதார ரீதியாக’’ அடையாளம் காணுவது சாத்தியமானதல்ல. ஏனெனில், வருமானம் நிலையானதல்ல; இடத்திற்கு இடம், மக்கள் பிரிவுகளுக்கு இடையேயும் பலவகை வருமான மாறுபாடு உண்டு.

ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் பெறுவோர் ஏழைகளா?

அதைப்பற்றி கவலைப்படாமல், ஒன்றிய அரசு ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்வரை வருமானம் வருபவர்கள் ‘ஏழைகள்’ அல்லது 5 ஏக்கர் நிலம் உடையவர்கள் ஏழைகள் என்று வரையறுத்து, அவர்களைப் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்று கூறியுள்ளது முரண்பாடானதாகும்.

தி.மு.க. போட்ட வழக்கான இதனை உச்சநீதிமன்ற அமர்வு சில வாரங்களுக்கு முன்பே விசாரித்து, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ஆணையிட்டது; ஆனால், ஒன்றிய அரசு அதை செய்யாமல் - நேற்று (21.10.2021) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கடுங்கோபத்துடன், ‘‘எந்த அடிப்படையில் ஒன்றிய அரசு 8 லட்சம் ரூபாய் வருமானம் பெறுவோர் ஏழைகள் என்று நிர்ணயம் செய்தது என்பதற்குப் போதிய விளக்கம் கேட்டோம். பிரமாணப் பத்திரத்தை ஏன் தாக்கல் செய்யவில்லை’’ என்று கேட்டு, ‘‘ஒன்றிய அரசின் இந்த ஆணைக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் எடுக்கவேண்டும்‘’ என்று கூறியுள்ளனர்.

ஏற்கெனவே வறுமைக்கோட்டுக்கு அளவுகோல் கிராமத்தில் 27 ரூபாய் சம்பாதிப்பவர்; நகர்ப்புறங்களில் அதுவே 34 ரூபாய்.

ஆனால், பா.ஜ.க. அரசு நாள் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வருமானம் உள்ளவர்கள் ‘ஏழை’ என்று கூறி, உயர்ஜாதியினருக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கி சில மாநிலங்கள் அமல்படுத்தவும் செய்கின்றன.

சமூகநீதி குழிதோண்டிப் புதைக்கப்படுவதா?

ஒன்றிய அரசு, வருமான வரித்துறை கணக்குப்படி இரண்டரை லட்சம் வருமானம் வந்தாலே, ‘அவரிடம், வருமான வரி செலுத்துங்கள்’ என்று கேட்கும் உரிமையைப் பெற்றுள்ளது என்றால், அதுபோல 3 மடங்கு வருமானம் பெறுபவர்களாக உள்ள உயர்ஜாதியினர் ஏழைகளா?

இது எந்த அடிப்படையில்?

நியாயமான கேள்வி - ஏன் மவுனம் இவர்களுக்கு - மவுனத்தைக் கலைக்கக் கூறியுள்ளது. நாம் முன்பு பலமுறை சுட்டிக்காட்டியுள்ள நியாயங்கள் - அங்கே உச்சநீதிமன்றத்தில் எதிரொலிக்கின்றன! விடியல் எப்போதென்று தெரியவில்லை - அரசமைப்புச் சட்டம் நாளும் செல்லரிக்கப்படுகிறது! பாதுகாக்கப்படவேண்டிய கடமை அனைத்து ஜனநாயக சக்திகளுடையதாகும்.

‘என்னே வினோதம்!’ - வேடிக்கை! சமூகநீதி குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது.!

இவ்வாறு கி.வீரமணி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “நகைக்கடன் தள்ளுபடி.. விரைவில் அரசாணை வெளியிடப்படும்” : அமைச்சர் ஐ.பெரியசாமி கூறிய முக்கிய தகவல்!