Tamilnadu

“நண்பனின் பிறந்தநாளில் கொண்டாட்டத்தின்போது இடிதாக்கி கல்லூரி மாணவன் பலி” : விழுப்புரத்தில் நடந்த சோகம்!

ராணிப்பேட்டை தாலுக்கா வளவனூர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் நித்திஷ். இவர் வந்தவாசி தாலுக்கா தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை கணிதம் படித்து வருகிறார்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை அடுத்த இராவணம்பட்டு கிராமத்தில், நித்தீஷ் உடன் பயிலும் நண்பன் தக்ஷிணாமூர்த்தியின் பிறந்தநாளுக்கு நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட வருகை தந்து, பிறந்த நாளுக்காக நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி  செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பெய்த மழையால் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பிரியாணி மழையில் நனையாமல் இருக்க தார்பாய் பிடித்துள்ளனர். அப்போது திடீரென தாக்கிய இடி மின்னலால் நித்திஷ் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் இருந்த நண்பன் தினேஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அவலூர்பேட்டை போலிஸார், வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பன் பிறந்தநாளில் கொண்டாட்டத்தின்போது இடிதாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “இந்தியாவில் செல்வாக்கு பெற்ற முதலமைச்சர்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடம்”: CNOS சர்வே!