Tamilnadu

“வார்டு உறுப்பினராக பதவியேற்ற ரவுடியின் மனைவி கைது” : பதவியேற்பு விழாவில் போலிஸார் அதிரடி - என்ன காரணம்?

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூா் ஒன்றியத்தில் அடங்கிய நெடுங்குன்றம் ஊராட்சியில் 9வது வாா்டில் விஜயலட்சுமி என்ற பெண் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இந்த விஜயலட்சுமி பிரபல ரவுடி சூர்யாவின் மனைவி ஆவார்.

ரவுடி சூா்யா மீது பீர்க்கன்கரணை, வண்டலூா் ஓட்டேரி, சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வெடிகுண்டு தயாரித்தல் உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சூரியா தற்போது சிறையில் உள்ளாா்.

இந்நிலையில், நேற்று உள்ளாட்சி தோ்தல்களில் வெற்றிப்பெற்ற ஊராட்சி தலைவா்கள், உறுப்பினா்கள் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் பதவிப்பிரமாணம் செய்து பொறுப்பேற்று கொண்டனா். அதைப்போல், நெடுங்குன்றம் ஊராட்சி மன்றத்தில் நடந்த விழாவில் விஜயலட்சுமி கலந்து கொண்டு பதவிப்பிரமாணம் செய்து பொறுப்பேற்று கொண்டாா்.

அதன்பின்பு அவா் மேடையிலிருந்து கீழே இறங்கியதும், அங்கு தயாராக நின்ற வண்டலூா் ஓட்டேரி போலிஸார், விஜயலட்சுமியை கைது செய்தனா். அவா் போலிஸாருடன் செல்ல மறுத்தால், பெண் போலிஸார், விஜயலட்சுமியை சுற்றி வளைத்து கைது செய்து அழைத்துச் சென்று வேனில் ஏற்றி வண்டலூா் ஓட்டேரி காவல்நிலையம் கொண்டு சென்றனா்.

விஜயலட்சுமியின் ஆதரவாளா்கள் எங்கள் வாா்டு உறுப்பினரை ஏன் கைது செய்தீா்கள்? என்று கேட்டனா். அதற்கு போலிஸார், விஜயலட்சுமி கஞ்சா விற்பனை செய்த வழக்குக்காக கைது செய்துள்ளோம் என்று கூறினார்கள்.

Also Read: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு.. விதிமுறைகளை மீறிய எஸ்.ஐ உள்பட 7 பேர் பணியிடை நீக்கம்: என்ன நடந்தது?