Tamilnadu

“ரூ.500 கொடுத்தால் போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கிடைக்கும்”: மோசடியில் ஈடுபட்டவர் கைது - நடந்தது என்ன?

சென்னையைச் சேர்ந்தவர் ஹாரிஸ் பர்வேஸ். இவர் மண்ணடி தம்பு செட்டி தெருவில் மருத்துவ பரிசோதனை மையம் நடத்தி வருகிறார். இதில் கொரோனா பரிசோதனை செய்து வருகிறார். இந்நிலையில், இவரது பரிசோதனை மையத்தின் பெயரி பயன்படுத்தி கொரேனா சான்றிதழ் வழங்கப்படுவதாக வாட்ஸ் ஆப்பில் வந்த விளம்பரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அந்த விளம்பரத்தில் விமான பயணிகளுக்கு ரூ.500 கட்டணத்தில் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பர்வேஸ் அந்த வாட்ஸ் ஆப் எண்ணைத் தொடர்பு கொண்டு தனக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் வேண்டும் என கேட்டுள்ளார். பிறகு கூகுள்பே மூலம் 500 ரூபாய் செலுத்திய உடனே அவருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வந்துள்ளது.

எந்தவிதமான பரிசோதனையும் இல்லாமல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வந்ததைப் பார்த்து பர்வேஸ் அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு உரிய ஆதாரத்துடன் பூக்கடை காவல்நிலையத்தில் பர்வேஸ் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலிஸார் போலி கொரோனா சான்றிதழ் தயாரித்துக் கொடுத்து வந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இன்பர்கான் என்பவரைக் கைது செய்தனர். மேலும் இவர் வெளிநாடுகளுக்குத் தங்கத்தைக் கடத்தும் குருவியாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

மேலும், போலியாக கொரோனா சான்றிதழ் தயாரித்துக் கொடுத்த பணத்தில் உல்லாசமாக வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: “பெட்ரோல் விலை 200-ஐ கடந்தால் 3 பேர் செல்லலாம்” : ஐடியா என்ற பெயரில் விபரீத யோசனை சொன்ன பா.ஜ.க தலைவர் !