Tamilnadu

"இன்னும் 10 நாள்தான்.. இலக்கை எட்டிவிடுவோம்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவது என்ன?

சென்னை மெட்வே ஹார்ட் இன்ஸ்டிடியூட்டின் 5-வது கிளையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கிவைத்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு முறை கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கும்போதும் விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் முகக்கவசம் மற்றும் கொரோனா விதிமுறைகளைக் கடைபிடிக்கவும் அறிவுறுத்தி வருகிறார்.

மக்களின் உயிர்களைக் காக்கத்தான் அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பதை உணர்ந்து கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் விதிமுறைகளைக் காற்றில் பறக்க விட்டுவிடக்கூடாது.

இந்திய அளவில் தடுப்பூசி செலுத்துவதில் 8 அல்லது 9வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. மேலும் தடுப்பூசிகளை வீணடிக்காத மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. மே 7க்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர முயற்சிகளால் இன்றுவரை 5.29 கோடி பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இன்றுவரை தமிழ்நாட்டில் 67% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்றும் 10 நாட்களில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளவாறு 70% என்ற இலக்கினை அடைய இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: இது அடிபணியும் ஆட்சி கிடையாது; கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கே அழுத்தம் தேவை - BJPக்கு சேகர்பாபு தக்க பதிலடி