Tamilnadu
“2 முறை மயக்க ஊசி செலுத்தியும் தப்பி ஓடிய T23 புலி” : மசினக்குடி காட்டில் இரவில் நடந்த ‘திகில்’ சம்பவம்!
நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் தேவாலா பகுதிகளில் 4 பேரை அடித்து கொன்ற T23 புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 20வது நாட்களாக முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் போராடி வருகின்றனர். 12 வயது மதிக்கதக்க அந்த புலி மசினகுடி வனபகுதிக்கும் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவன் எஸ்டேட் பகுதிக்கும் மாறி மாறி சென்று வருகிறது.
இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர், 5 கால்நடை மருத்துவர்கள், கேரளா வனத்துறையினர், 3 மோப்பநாய்கள், அதிரடி படையினர் என ஏராளமானோர் இரவும் பகலாக தேடி வருகின்றனர். கடந்த 6-ந்தேதி சிங்காரா வன பகுதியில் அந்த புலி தென்பட்ட போது அடர்ந்த வனபகுதி என்பதால் மயக்க ஊசி செலுத்த முடியாமல் போனது. எனவே 145 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் T23 கண்காணிக்கபட்டது. நேற்று முன்தினம் தேவன் எஸ்டேட் அருகே போஸ்பரா பகுதியில் அந்த புலியின் உருவம் பதிவான நிலையில் ஓடக்கொல்லி பகுதியில் வனத்துறையினர் தேடினர். ஆனால் புலி தென்படாத நிலையில் நேற்று காலை கார்குடி பகுதிக்கு வந்தது.
பின்னர் இரவு 9.45 மணி அளவில் தெப்பக்காட்டிலிருந்து மசினகுடிக்கு வரும் நெடுஞ்சாலையில் T23 புலி நடந்து வந்தது. அதனை சில வாகன ஓட்டிகள் பார்த்து வீடியோ எடுத்த நிலையில் அங்கு கால்நடை மருத்துவர்களுடன் சென்ற வனத்துறையினர் 4 முறை மயக்க ஊசி செலுத்தினர். அதில் 2 மயக்க ஊசிகள் புலியின் மீது பட்டுள்ளது. மயக்க ஊசி பட்டவுடன் அந்த புலி அடர்ந்த வன பகுதிக்குள் தப்பி ஓடியது. அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் அந்த புலியை தேடும் பணியில் தொடர்ந்து 3 மணி நேரமாக தேடினர்.
ஆனால் இரவு நேரம் என்பதால் புலி மயங்கி விழுந்த இடத்தை கண்டறிய முடியவில்லை. அவர்களுக்கு உதவியாக 2 கும்கி யானைகளும் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டன. தேடுதல் பணி தோல்வியடைந்ததையடுத்து 1.30 மணி அளவில் அனைவரும் தேடுதல் பணியை கைவிட்டு வெளியில் வந்தனர்.இருப்பினும் மீண்டும் நாளை காலை 6 மணி அளவில் மயக்க ஊசி செலுத்தப்பட்ட பகுதியில் வனத்துறையினர் மீண்டும் தேடுதல் வேட்டை நடத்த உள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டு புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர் .
Also Read
-
"நடராஜனால் இந்தியா மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டே மகிழ்ச்சியடையும்" - ஷேன் வாட்சன் கருத்து !
-
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை : இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டம் !
-
"பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது"- சமூக மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட குஜராத் பொதுமக்கள் !
-
ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் - மோடி மவுனமாக இருப்பது ஏன்? : மம்தா பானர்ஜி கேள்வி!
-
அமித்ஷாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கொலை மிரட்டல் : தோல்வி அச்சத்தில் பா.ஜ.க!