Tamilnadu

இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை... தூத்துக்குடியில் நடந்தது என்ன?

தூத்துக்குடியில் கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி திருமலையாபுரத்தைச் சேர்ந்தவர் துரைமுருகன் (39). இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் துரைமுருகன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த வாரம் நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரத்தில் நடந்த கொலைச் சம்பவம் தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலிஸார் துரைமுருகனை தேடி வந்தனர்.

இந்நிலையில், முத்தையாபுரம் பொட்டலகாடு பகுதியில் பதுங்கியிருந்த அவரை இன்று பிற்பகலில் போலிஸார் சுற்றி வளைத்தனர். அப்போது போலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டு கோவளம் கடற்கரை பகுதியில் தப்பமுயன்ற துரைமுருகன் மீது போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து என்கவுன்டர் நடந்த இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், டவுன் டி.எஸ்.பி கணேஷ், முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலிஸார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

என்கவுன்டரில் பலியான துரைமுருகனின் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதால், தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் திருமலையாபுரம் பகுதிகளில் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக சமீபத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே வட மாநிலத் துப்பாக்கி கொள்ளையர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போலிஸார் கொள்ளையர்களில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

Also Read: தொடர் தேடுதல் வேட்டை... துப்பாக்கியுடன் காட்டுக்குள் பதுங்கிய கொள்ளையன் என்கவுன்டர்.. நடந்தது என்ன?