Tamilnadu

அ.தி.மு.க-வில் உச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல்.. கூட்டத்தை புறக்கணித்த மாஜி அமைச்சர் - நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக உள்ள எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அ.தி.மு.க பொன்விழா சிறப்பான முறையில் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல்லடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அ.தி.மு.க பொன்விழா ஆண்டை சிறப்பான முறையில் நடத்துவது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் பல்வேறு கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ கரைப்புதூர் நடராஜன் மீது அங்கிருந்த ஒரு சில நிர்வாகிகள் பல்வேறு புகார்களை கூறினர்.

இதையடுத்து கரைப்புதூர் நடராஜன் அவர்களிடத்தில் கடுமையான வாக்குவாதம் செய்தார். அதனைத் தொடர்ந்து முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தற்போதைய பல்லடம் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் தலையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களையும், முன்னாள் எம்.எல்.ஏ கரைப்புதூர் நடராஜனையும் சமாதானம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆலோசனைக்கூட்டம் அவசர அவசரமாக பாதியிலேயே நிறைவடைந்ததாக கூறி அனைவரும் கலைந்து சென்றனர். எம்.எல்.ஏ அலுவலகத்தில் அ.தி.மு.க பொன்விழா ஆண்டை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட இந்த மோதல் சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Also Read: வெற்றிபெற்ற கழகக் கண்மணிகளுக்கு ஒரு வேண்டுகோள்.. தலைவர் கலைஞர் கூறிய அறிவுரையை நினைவில் கொள்ளுங்கள்!