Tamilnadu
கட்டைப்பையில் குழந்தையை கடத்திய பெண்.. CCTV காட்சி மூலம் 24 மணிநேரத்திற்குள் குழந்தையை மீட்ட காவல்துறை!
தஞ்சாவூர் மாவட்டம் பர்மா காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமி கடந்த 4ஆம் தேதி தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அக்டோபர் 5ஆம் தேதி குணசேகரன் ராஜலட்சுமி தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அப்போது மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் ராஜலட்சுமியுடன் அறிமுகமாகி அவருக்கு சிற்சில உதவிகள் செய்து வந்துள்ளார்.
இதனால் அந்தப் பெண்ணை நம்பிய ராஜலட்சுமி, தன்னுடைய குழந்தையை பார்த்துக்கொள்ள அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அந்தப் பெண்ணிடம் குழந்தையைப் பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு, வார்டுக்கு வெளியே சென்றுள்ளார்.
அப்போது மீண்டும் உள்ளே வந்து பார்த்தபோது குழந்தையையும், அந்தப் பெண்ணையும் காணவில்லை. இதனையடுத்து காவல்துறையினரிடம் ராஜலட்சுமி புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து உடனடியாக விசாரணை துவங்கிய போலிஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்தப் பெண், குழந்தையைக் கட்டைப் பையில் வைத்து கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை அமைத்து கடத்திச் சென்ற பெண்ணை போலிஸார் இன்று பிடித்து அவரிடம் இருந்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். போலிஸாரின் உடனடி நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!