Tamilnadu

“மின்சாரம் தாக்கிய மகனும் காப்பாற்ற சென்ற தந்தையும் பரிதாப பலி”: அரியலூரில் நடந்த சோகம்!

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் தனது குடும்பத்துடன் காட்டுப்பகுதியில் வீடுகட்டி விவசாயம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மளிகை கடையில் வேலை செய்துவந்த, இவரது மகன் சங்கர் வேலை முடித்து விட்டு சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது.

இதனால் வீட்டிலிருந்த முருங்கை மரம் முறிந்து மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதில் மின்கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது. இதை கவனிக்காமல் வீட்டிற்கு வந்த சங்கர் மின் கம்மியை மிதித்தபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.

பின்னர், சத்தம் கேட்டு வெளியே வந்த முத்துசாமி மகனைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து மகனைக் காப்பாற்றச் சென்ற போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் தந்தை, மகன் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கியதில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பணிபுரியும் இடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஊழியர்: லாட்ஜிற்கு வரவழைத்து அடித்து உதைத்த பெண்கள்!