Tamilnadu

”நடைபாதையில் உறக்கம்; வேகமாக வந்த கார்..” - மனைவியுடன் சண்டையிட்ட கணவருக்கு நேர்ந்த துயரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (45), இவரது மனைவி ஆனந்தி. இந்த தம்பதிக்கு தேஜஸ்ரீ, சந்திரஸ்ரீ என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

சென்னையில் குடியேறியே ஏழுமலை டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். விபத்து ஒன்றில் காலில் காயம் ஏற்பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

கணவன் மனைவி இடையே வறுமை காரணமாக ஏற்பட்ட சண்டையில் கடந்த ஜூன் மாதம் சொந்த ஊருக்கு ஏழுமலை புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனந்தி அருகில் உள்ள சிறிய கம்பெனியில் வேலைக்குச் சென்று பிள்ளைகளை பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி ஆனந்தி அலைபேசிக்கு மயிலாப்பூர் காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. ஏழுமலை விபத்தில் சிக்கி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்பின் சிகிச்சை பலனின்றி 5ஆம் தேதி ஏழுமலை உயிரிழந்துள்ளார்.

காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் சம்பவத்தன்று ஏழுமலை மயிலாப்பூர் தேரடி சன்னதி தெருவில் சாலையோரம் உறங்கியுள்ளார். அவ்வழியாக வந்த கார் ஒன்று ஏழுமலை மீது ஏறி இறங்கி விபத்தை ஏற்படுத்திவிட்டு சம்பவ இடத்தில் நிற்காமல் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

விபத்து அதிகாலை 4 மணி அளவில் நடைபெற்றதால் பொதுமக்கள் யாரும் இல்லை. துப்புரவு பணியாளர்கள் சாலையோரத்தில் ஏழுமலை ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தியது தொடர்பான தகவல்களை விசாரித்து வருகின்றனர்.

Also Read: சிறுமியை கொன்றுவிட்டு எதுவும் தெரியாதது போல் நாடகமாடிய இளைஞர் - விசாரணையில் ‘பகீர்’ தகவல்!