Tamilnadu
"வடமாநில தொழிலாளர்களை வாக்காளர்களாக சேர்த்த அ.தி.மு.கவினர்” : தேர்தல் ஆணையத்தில் ஆர்.எஸ்.பாரதி MP புகார்!
உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அ.தி.மு.கவினர் சேர்த்துள்ள 5,000-த்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் வாக்களிக்கத் தடை விதித்து, நியாயமான முறையில் தேர்தலை நடத்தவேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், “வருகின்ற 9.10.2021 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக நேற்று (06.10.2021) காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் தொகுதியில் உள்ளடங்கிய திருப்பெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திலும் வெளியிட்டுள்ள வாக்காளர் துணைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும் தற்காலிகமாகக் கட்டிடப் பணியாற்ற வந்திருக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வருகிறது.
மேலும் இந்த வாக்காளர்கள் அனைவரும் போலியானவர்கள் என்பது தெரிந்துவிடும் என்பதால் இந்த துணை வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களுடைய புகைப்படம் இணைக்காமல் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்கட்டத் தேர்தல் நேற்று 6.10.2021 முடிவடைந்த நிலையில், நேற்று வெளியிடப்பட்டுள்ள துணை வாக்காளர் பட்டியல் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு சட்டப்படி ஏற்புடையதல்ல. எனவே இத்தகைய போலி வாக்காளர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை. அவர்களை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்பது சட்டத்தின் நிலைப்பாடு.
இந்த துணைப் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் அ.தி.மு.கவினரால் வேண்டுமென்றே திட்டமிட்டு இணைக்கப்பட்டுள்ள போலி வாக்காளர்கள் ஆவார்கள்.
எனவே, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994 மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்துத் தேர்தல் விதிமுறைகள் 1995-க்கு முரணாக எந்தவித ஆதாரமும் இல்லாமல், புகைப்படமும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ள இந்த துணைப் பட்டியலில் உள்ளடக்கிய போலி வாக்காளர்கள் அனைவரையும் வருகின்ற 9.10.2021 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கத் தடைவிதித்து, நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும். இதுகுறித்து அனைத்து மேல்நடவடிக்கைகளும் சட்டப்படி எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கேட்டுக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
-
அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!
-
"நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை" - சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வாதம் !
-
கடும் மழை எச்சரிக்கை : திண்டுக்கல் மக்கள் கவனத்திற்கு... அவசர எண் அறிவிப்பு - முழு விவரம்!