Tamilnadu
“பவானிபூர் மக்கள் ஒவ்வொருவரின் சார்பாகவும்..” : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த மம்தா பானர்ஜி!
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 58,389 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளரை தோற்கடித்து மாபெரும் வெற்றி பெற்றார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி, முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பிறகு தோற்றதாக அறிவிக்கப்பட்டு பா.ஜ.க.வின் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்கவைத்தபோதும், மம்தா தோல்வியுற்றதால் அவர் ஆறு மாத காலத்துக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் வென்றாக வேண்டும். அதற்கு ஏதுவாக பவானிப்பூர் தொகுதியில் இருந்து வென்று வேளாண் துறை அமைச்சராக இருந்த சோபாந்தேப் சட்டோபாத்யாயா ராஜினாமா செய்தார்.
அந்த தொகுதி உட்பட மொத்தம் மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது அதில், மம்தாவை எதிர்த்து பிரியங்கா திப்ரேவலை பா.ஜ.க நிறுத்தியது.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளை பெற்று பா.ஜ.க வேட்பாளர் பிரியங்கா திப்ரேவாவை விட 58,389 வாக்குகள் கூடுதலாகப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். பா.ஜ.க வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் வெறும் 26,320 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார்.
முதல்வர் மம்தா பானர்ஜியின் மகத்தான வெற்றியை தொடர்ந்து அவரது வீட்டு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற செய்தி அறிந்ததும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டார்.
அவரது வாழ்த்துச் செய்தியில் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற பபானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி மகத்தான வெற்றி பெற்று இருப்பதன் மூலம் அவர் மீதான மக்களின் நம்பிக்கை உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் கனிமொழி எம்.பி மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ உள்ளிட்டோரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மனமார்ந்த நன்றி மு.க.ஸ்டாலின் அவர்களே! மேற்கு வங்கம் மற்றும் பவானிபூர் தொகுதியின் ஒவ்வொருவரின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கனிமொழி எம்.பிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவில், “நமது அரசியலமைப்பின் மதிப்புகளைப் பாதுகாக்க நாம் எப்போதும் இணைந்து பாடுபடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!