Tamilnadu

தொழிலதிபர் கடத்தல் வழக்கில் திருப்பம்: குறுக்கு வழியில் சம்பாதிக்க ஆசைப்பட்டு சிறை சென்ற ஒப்பந்ததாரர்!

சென்னை அண்ணா நகர் 'W' பிளாக் பகுதியில் வசித்து வருபவர் பிரவீன் (54). இவர் கட்டிட கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஜூன் மாதம் 7 ஆம் தேதி பிரவீன் அண்ணா நகர் 'X' பிளாக் வழியாக தனது காரில் வந்து கொண்டிருந்தபோது இரு வேறு கார்களில் வந்த மர்ம நபர்கள் பிரவீன் காரின் முன்னும் பின்னும் மோதி, கத்தியைக் காட்டி மிரட்டி அவரை பின் தொடர்ந்து கடத்த முயன்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பிரவீன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Also Read: காலி நிலம்; நோட்டமிட்டு கைமாற்றிய கும்பல்; ரூ.15,000க்காக தாயை வைத்து ஆள்மாறாட்டம் -சிக்கிய மோசடி பேர்வழி

இதற்கிடையில் சென்னை கொளத்தூர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை கட்டிவைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் அம்பத்தூரைச் சேர்ந்த தமிழ் (எ) தமிழ் செல்வம் (23), பாடி குப்பம் பகுதியைச் சேர்ந்த விஜய் (25), கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மதன் (25), பாக்சர் விஜய் (எ) விஜய குமார் (25) மற்றும் மைக்கேல் (எ) ஸ்டீபன் ராஜ் (32) ஆகிய 5 பேரை ராஜமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, அண்ணா நகர் தொழிலதிபர் பிரவீனை கடத்த முயன்றதும் தாங்கள்தான் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில் ராஜமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்ட 5 குற்றவாளிகளையும் அண்ணா நகர் போலீசார் தொழிலதிபர் பிரவீன் கடத்தல் வழக்கிலும் கைது செய்து அவர்களை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அம்பத்தூரைச் சேர்ந்த முகமது பாட்ஷா (27) என்பவர்தான் தொழிலதிபர் பிரவீனை கடத்தச் சொல்லி ஸ்கெட்சு போட்டு கொடுத்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து அண்ணா நகர் போலீசார் முகமது பாட்ஷா-வை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது கட்டிட கட்டுமான தொழில் செய்து வரும் பிரவீனுக்கு மணல் சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர்தான் இந்த முகமது பாட்ஷா என்பதும், பிரவீனிடம் பணம் நிறைய இருப்பதை அறிந்த முகமது பாட்ஷா, பிரவீனை கடத்தி பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதனையடுத்து முகமது பாட்ஷா-வை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: 80 வழக்குகள் நிலுவை; 60 இடங்களில் CCTV;சுகபோகமாக வாழ்ந்த பிரபல கொள்ளையன் திருட்டுகேசில் சிக்கியது எப்படி?