Tamilnadu

“மகளுக்கு கை, கால், முகத்தில் வெட்டு.. தூக்கில் சடலமாக தொங்கிய தந்தை” : அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அடுத்த அதவத்தூர் சக்தி நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மூர்த்தி (72). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி பிருந்தா தேவி. இவரது மகன்‌ அருண். முதல் மனைவி மறைந்ததை தொடர்ந்து லதா என்பவரை ‌இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டாவது மனைவிக்கு பிரபாகரன் என்ற மகனும் கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், மூர்த்தியின் மனைவி லதாவும் மகன் பிரபாகரனும் குடும்ப விழாவில் கலந்து கொண்டு இன்று வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டிற்குள் மூர்த்தி தூக்கில் தொங்கிய படியும், கீர்த்தனாவுக்கு கை, கால், முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அருகில் அரிவாள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சோமரசம்பேட்டை போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கீர்த்தனாவை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சோமரசம்பேட்டை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முதல் மனைவியின் மகன் அருள்ராஜூக்கும் மூர்த்திக்கும் இருந்த சொத்து தகராறு காரணம் இச்சம்பவம் நடந்ததா அல்லது தந்தையே மகளை வெட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலிஸார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

மேலும் கீர்த்தனா சுய நினைவுக்குக் வந்தால் மட்டுமே சம்பவத்துக்கான காரணம் தெரிய வரும் என போலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அதிமுக ஆட்சியின் அடுத்த முறைகேடு: அரசு பணத்தில் வாங்கிய 10 காரை தனது பெயருக்கு மாற்றிய தனியார் நிறுவனம்!