Tamilnadu

டாக்டர் எனக் கூறி புதுச்சேரி பெண்ணிடம் ரூ.13 லட்சம் சுருட்டிய நைஜீரிய கும்பல்: போலிஸில் சிக்கியது எப்படி?

புதுச்சேரி ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி ஜெயந்தி. இவருக்கு ஃபேஸ்புக் வாயிலாக வெளிநாட்டைச் சேர்ந்த எரிக்வால்கர் என்பவர் டாக்டர் எனக் கூறி அறிமுகமாகி பழகிவந்துள்ளார்.

இதையடுத்து ஜெயந்தியின் மகள் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த தங்க நகையைப் பரிசுப் பொருளாக அனுப்பியுள்ளதாக எரிக்வால் தெரிவித்துள்ளார். பின்னர் கடந்த ஜூலை 24ஆம் தேதி டெல்லி விமான நிலையத்தில் இருந்து அதிகாரி பேசுவதாக ஜெயந்திக்கு போன் ஒன்று வந்துள்ளது.

அதில், இங்கிலாந்திலிருந்து விலை உயர்ந்த பொருட்கள் வந்துள்ளது. இதற்கான வரியைக் கட்டினால்தான் பொருட்கள் வெளியே விடப்படும் எனக் கூறியுள்ளனர். மேலும் வங்கி கணக்கு எண்ணைக் கொடுத்து வரித்தொகையைச் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ஜெயந்தி ரூ.13 லட்சத்து 65 ஆயிரத்தை அனுப்பிவைத்துள்ளார். ஆனால் வீட்டிற்கு எந்த ஒரு பொருளும் வரவில்லை. இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயந்தி புதுச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இது குறித்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து ஜெயந்தியிடம் மோசடி செய்த கும்பல் டெல்லியில் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. பிறகு அங்கு சென்ற புதுச்சேரி தனிப்படை போலிஸார் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இஷிகோ பேட்ரிக், ஆண்டனி ஆகிய இருவரையும் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர்.

மேலும் அவர்களிடம் இதுபோன்று எத்தனை பேரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: தீபாவளி சீட்டு போடும் மக்களே உஷார்: பணத்தையும் பெற்று நகைகளையும் அள்ளிச்சென்ற உரிமையாளர்கள் மீது புகார்!