Tamilnadu

“வரி ஏய்ப்பு செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும்” : அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

வரி ஏய்ப்பு செய்யும் எந்த நிறுவனமாக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி எச்சரித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் பி.மூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் வணிகம் செய்யும் துணிக்கடைகளில் மாதாந்திர அறிக்கைகளை ஆய்வு செய்ததில் அவர்கள் வரியை சரிவர செலுத்தவில்லை என்பது தெரியவந்தது. அவற்றை கண்டறிவதற்காக வணிகவரி ஆணையரின் மேற்பார்வையில் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு 260 வணிகவரித் துறை அதிகாரிகளால் 115 இடங்களில்ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு பெரும்பாலான இடங்களில் முடிவுற்ற நிலையில் இன்னும் சில இடங்களில் ஆய்வு நடத்தப்பட வேண்டியுள்ளது. ஆய்வு நடத்தி அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட குறைகள் கண்டறியப்பட்டுள்ளன.

வரி மறைக்கப்பட்டது, தவறாக உள்ளிட்டு வரி செலுத்தியது, வாடகை போன்ற சில சேவைகளுக்கு வரி செலுத்தாத பதிவு பெறாத இடங்களில் சரக்கு இருப்பு வைத்துள்ளது போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. இவை சம்பந்தமான கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகள் மொத்தம் 101.49 கோடி ஆகும்.

சோதனை மேற்கொள்ளப்பட்ட 115 இடங்களில் அரசுக்கு செலுத்தவேண்டிய வரி சுமார் ரூ. 101.49 கோடி. நாளுக்கு நாள் வரி ஏய்ப்பு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்காக துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கடந்த 4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு வரக்கூடிய வருவாயில் 87% வணிக வரியில் இருந்து தான் வருகிறது. வரி ஏய்ப்பு செய்யும் எந்த நிறுவனமாக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்” எனத் தெரிவித்தார்.

Also Read: "10 ஆண்டாக நிறுத்தப்பட்ட கிராமப்புற பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும்": அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி!