Tamilnadu

”இந்த ஃபார்முலாவை இந்தியாவுக்கு சொல்லிக் கொடுத்ததே மு.க.ஸ்டாலின்தான்” - தினகரன் நாளேடு கூறியது என்ன?

தமிழகத்தில் ரவுடிகள் கொட்டத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்டி தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலம் தமிழகம்தான் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார் என தினகரன் நாளேடு ”வேட்டை தொடரும்” என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது!

அது பற்றிய விவரம் வருமாறு:

”தமிழகத்தில் கடந்த மே மாதம் திமுக அரசு பொறுப்பேற்றபோது பல்வேறு சவால்கள் காத்திருந்தன. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பெரும் பொறுப்பு முதல்வர் பதவியில் அமர்ந்த நாள் முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காத்திருந்தது. தனது அமைச்சரவை சகாக்களையும், எம்எல்ஏக்களையும் தொகுதிகளுக்கு முடுக்கி விட்டு பெருந்தொற்றை கட்டுப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தார்.

அதைத் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் என அறிவித்தார். இந்த பார்முலாவை இந்தியாவிற்கு சொல்லிக் கொடுத்தவரே தமிழக முதல்வர்தான். இதற்கு பிறகுதான் மோடி பிறந்த நாளன்று மெகா தடுப்பூசி முகாமிற்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்தது. இந்த வரிசையில் தமிழக முதல்வர் தற்போது எடுத்துள்ள ஆயுதம்தான் ரவுடிகள் வேட்டை.

Also Read: “கூலிப்படை ஆதிக்கத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி”: குற்றங்களை தடுக்க களத்தில் இறங்கிய DGP சைலேந்திரபாபு!

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 ஆயிரம் இடங்களில் நடந்த சோதனையில் 870 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்தி, அரிவாள் என 250க்கும் மேற்பட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் கொலை சம்பவங்கள் அரங்கேறின.

இதைத் தொடர்ந்து ரவுடிகளை ஒடுக்கும் பணியை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. மிரட்டல், உருட்டல், பணம் பறித்தல், கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், பணத்திற்காக கொலை செய்தல் என ரவுடிகள் தங்களுக்கென்று ஒரு ராஜ்யம் அமைத்துக் கொண்டு உலா வருகின்றனர். இதற்காக இளைஞர்களை மூளைச் சலவை செய்து தனக்கென ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு அசம்பாவிதங்களில் ஈடுபடுகின்றனர்.

சமூக வலைதளங்கள் தற்போது பெருகிவிட்ட நிலையில் வாள், கத்தி போன்ற ஆயுதங்களால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் கலாசாரம் ரவுடிகளிடம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுகிறது. ரவுடிகள் கொட்டத்தை ஒழித்தால் தான் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முடியும். சிறந்த மாநிலமாக தமிழகத்தை உயர்த்த முடியும்.”

Also Read: “தி.மு.க-வுக்கு வாக்களிக்கலையேன்னு இப்போ வருத்தப்படுறேன்” - அரசின் உடனடி உதவியால் பெண் நெகிழ்ச்சி!