Tamilnadu

EBல் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.23 லட்சம் அபேஸ்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய தனிப்படை போலிஸ்!

சென்னை சூளைமேடு கில்நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த பழனிக்குமார். ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியரான பழனிக்குமார், தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 10-ம்தேதி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (30) என்பவர் பழனிக்குமார் வீட்டின் முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மின்சார வாரியத்தில் உதவி செயற்பொறியாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி 23 லட்சம் ரூபாய் பாலகிருஷ்ணனிடம் இருந்து பழனிக்குமார் பெற்று ஏமாற்றி விட்டார். இதில் ரூ.13 லட்சத்தை கொடுத்து விட்டார். ரூ. 10 லட்சத்தை திருப்பி தரவில்லை. தொடர்ந்து ஏமாற்றி வந்ததால் பழனிக்குமார் வீட்டு முன் பாலகிருஷ்ணன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Also Read: மாணவர் விசாவில் சென்னை வந்து துறைமுக சொத்தை சூறையாடிய மோசடி கும்பல்: CBI விசாரணையில் வெளிவந்த ரிப்போர்ட்

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து பழனிக்குமாரை கைது செய்த சூளைமேடு போலிஸார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பழனிக்குமார் மீது பண மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவரையும் போலிஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த தலைமைச்செயலக ஊழியரை சூளைமேடு ஆய்வாளர் வெற்றிச்செல்வன் மற்றும் உதவி ஆய்வாளர் மாரீஸ்வரன் ஆகியோர் தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர். தலைமை செயலகத்தில் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிப்புரியக்கூடிய கொடுங்கையூரைச் சேர்ந்த பரமசிவம். இவர் மூலமாகத்தான் பழனிக்குமார் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சூளைமேடு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Also Read: சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து லீஸ்-க்கு விட்டு லட்சக்கணக்கில் சுருட்டல்: பாஜக நிர்வாகி அதிரடி கைது!