Tamilnadu

“தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுமைக்கும் பரவியுள்ளது” : முதலமைச்சர் உரை!

தமிழ்நாடு அரசு, தொழில்துறை சார்பில் “ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு” என்னும் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவானர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதி மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தொழில் வளர்ச்சி என்பது அனைத்து துறைகளின் வளர்ச்சிகளியும் சார்ந்ததது. இதுவே நாட்டின் வளர்ச்சியாக அமையும்.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி பல்வேறு மாவட்டங்களில் தொழில் துறை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு என்றும் இந்த அரசு உறுதுணையாக இருக்கும். அனைத்து ஆதரவுகளையும் வழங்க நாங்கள் காத்திருக்கிறோம். இந்தியாவில் தமிழ்நாடு மூன்றாவது ஏற்றுமதி மாநிலமாக உள்ளது.

அடை அணிகலன் ஏற்றுமதியில் 52 விழுக்காடு, காலனி ஏற்றுமதியில் 40 விழுக்காடு தமிழ்நாடு பெற்றுள்ளது. ஏற்றுமதி திறனை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகின்றது. "மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு" தலைமைச் செயலாளர் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்படவுள்ளது.

தூத்துக்குடியில் சர்வதேச அறைகலன் பூங்கா இந்தியாவின் முதல் முறையாக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது எப்போதும் தமிழ்நாட்டின் வளர்ச்சியாக மட்டும் இருந்தது இல்லை. அது இந்தியா முழுமைக்கும் பரந்த வளர்ச்சியாக இருந்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய வளர்ச்சியாகவும் இருந்துள்ளது. அதைத்தான் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றார் அவ்வை மூதாட்டி.

உலக வர்த்தகர்களும் வணிகர்களும் ஒன்று கூடும் இடமாக நம்முடைய தமிழ்நிலம் இருந்துள்ளது. அத்தகைய பழம்பெருமையை நாம் மீண்டும் மீட்டாக வேண்டும். நம்முடைய தயாரிப்புகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் நிறுவனத்தை தொடங்கவேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ரூ.2200 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள்.. 41,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. அசத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!