Tamilnadu

“பிரபல சீரியல் படக்குழுவின் சூட்டிங் வேன் மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து”: 2 பேர் பலி - 11பேர் படுகாயம்!

சென்னையைச் சேர்ந்த பிரபல தனியார் தொலைக்காட்சியின் சீரியல் படக் குழுவினர் கடந்த சில நாட்களாக ஏற்காடு மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பிற்பகலில் ஏற்காடு அருகே உள்ள பக்கோடா பாய்ண்ட் என்ற பகுதியில் படப்பிடிப்பு நடத்தினர்.

பின்னர் ஏற்காடு அருகே உள்ள பெலாத்தூர் என்ற பகுதியில் படப்பிடிப்பு நடத்த ஈச்சர் வேனில் (Ecchervan) மாலை 5 மணியளவில் புறப்பட்டு சென்றனர். அப்போது வளைவான பகுதியில் லாரி ஒன்று வேகமாக வந்தது. இதனை அறிந்த வேன் ஓட்டுனர் ஈரோட்டை சேர்ந்த சங்கர் மெல்ல வேனை திருப்பினார். ஆனால் வேன் கட்டுப்பாட்டை இழந்து ஓடி 10 அடி பள்ளத்தில் குப்புற கவிழ்ந்தது.

இதில் அந்த வேனில் பயணித்த சென்னை சேர்ந்த பாண்டியன்(வயது 41) தேனியை சேர்ந்த சஞ்சய் (வயது 33)ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேனில் இருந்த கௌரி சங்கர் மற்றும் பேச்சியப்பன் உள்ளிட்ட 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே இவர்களை ஊர் பொதுமக்கள் பள்ளத்தில் இருந்து தூக்கி வந்து சாலையில் படுக்க வைத்தனர்.

இதனை அறிந்த ஏற்காடு டி.எஸ்.பி தையல்நாயகி மற்றும் இன்ஸ்பெக்டர் ரஜினி, சப்இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலிஸார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்த 9 பேரையும் முதல் உதவிக்காக வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையம் அனுப்பி வைத்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த பாண்டியன் மற்றும் சஞ்சய் ஆகியோரின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஏற்காடு போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Also Read: “தலையை துண்டாக வெட்டி ஆலயத்தில் வீசிய கும்பல்”: வாலிபரின் கொலை வழக்கில் குற்றவாளிகள் ‘பகீர்’ வாக்குமூலம்!