Tamilnadu

அதிமுகவால் பின் தங்கியிருந்த தமிழ்நாட்டை முன்னுதாரணமாக்கிய மக்கள் முதலமைச்சர் - தினகரன் நாளேடு புகழாரம்!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் எதிர் கொள்ள மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களைக் காக்க மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என ‘தினகரன்’ நாளேடு 14.9.2021 தேதியிட்ட இதழில் ‘தடுப்பூசி திருவிழா’ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:-

சிறிது காலம் குறைந்திருந்த கொரோனா பரவலின் வேகம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது மீண்டும் மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 27,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரத்து 175 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை இந்தியாவில் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 42 ஆயிரத்து 874 ஆகவும் உயர்ந்துள்ளது. இதில் சற்று ஆறுதல் அளிக்கும் செய்தி என்பது, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 47 ஆயிரத்து 32 ஆக உயர்ந்துள்ளது என்பதுதான். கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் நாடு முழுவதும் உள்ள மக்களிடையே உள்ளது. கடந்த இரு அலைகளின் போது பல்வேறு பொருளாதார நெருக்கடிகள், உயிரிழப்புகள், பொருள் இழப்புகளை சந்தித்த மக்கள், தற்போதுதான் மெல்ல இயல்புக்குத் திரும்பி வருகிறார்கள்.

சமூக இடைவெளி, முகக் கவசமும் அவசியம் என்பதை அவர்கள் உணர வேண்டும். கொரோனாவை எதிர்க்கும் ஒரே ஆயுதமாக இப்போதைக்கு தடுப்பூசி மட்டுமே உள்ளது. இந்தியாவிலேயே தடுப்பூசிகளை அதிகம் வீணடித்த மாநிலம் என்ற பெயரை தமிழகம் இதற்கு முன் பெற்றதற்கு காரணம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுதான். அ.தி.மு.க. ஆட்சியில் 4 சதவீத தடுப்பூசிகள் அதாவது 4 லட்சத்து 34 ஆயிரம் தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வெட்ட வெளிச்சமானது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் தலை நிமிர்த்துள்ளது. அதற்கு நேற்று முன்தினம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமே சாட்சி. திருவிழாவைப் போல மாநிலம் முழுவதும் தடுப்பூசி முகாமில் பொது மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் மூலம் ஒரேநாளில் 28 லட்சத்து 91 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இது மாபெரும் சாதனை.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படியான முகாம் நடத்தப்பட்டு, இவ்வளவு பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. தமிழகத்தில் 6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில் 66 சதவீதம், அதாவது 4 கோடியே 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமும் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக திகழ்கிறது. தமிழகத்தில் நடக்கும் கொரோனா தடுப்பூசி முகாமையும், தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகளையும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டியுள்ளார்.

மூன்றாவது அலை வந்தாலும் எதிர்கொள்ள தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஏனெனில், அவர்களைக் காக்க மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.